பாதுகாப்புப் பணியில் 1,400 காவலர்கள்; தீவிர வாகனச் சோதனை
கோவை: டிசம்பர் 6ஆம் தேதி வரை கோவை மாநகரம் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவை முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 1,400க்கும் மேற்பட்ட காவலர்களும் அதிகாரிகளும் ஆங்காங்கே வாகனச் சோதனை நடத்தி வரும் நிலையில், சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடுபவர் உடனடியாகக் கைது செய்யப்படுகின்றனர்.
கடந்த 1997ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி கோவை, உக்கடம் பகுதி அருகே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் செல்வராஜ் படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, கோவையில் வன்முறை வெடித்தது. அது பின்னர் கலவரமாக மாறியதை அடுத்து, ஒட்டுமொத்த மாநகரமும் சூறையாடப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மதக்கலவரத்தை தூண்டிவிட, ஏராளமான கடைகளும் வீடுகளும் தாக்குதலுக்கு ஆளாகின. இந்தக் கலவரத்தில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக 1998ஆம் ஆண்டு கோவையில் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவமும் நிகழ்ந்தது.
அதிலும் 58 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, ஆண்டுதோறும் நவம்பர் 29 முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை கோவையில் காவல்துறை கண்காணிப்பும் சுற்றுக்காவல் நடவடிக்கையும் தீவிரமாக்கப்படும்.
அந்த வகையில் நடப்பு ஆண்டிலும் டிசம்பர் இதுதிவரை கோவை நகரம் காவல்துறை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் தலைமையில் 4 துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என மொத்தம் 1,476 பேர் நகரம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்கடம், ஆத்துப்பாலம் சாலை, குனியமுத்தூர், போத்தனூர், பெரிய கடைவீதி, ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

