செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
406efd57-1334-4511-95c7-e98b3809eae1
-

மெரினாவில் இணையச் சேவை இலவசம்

சென்னை: மெரினா கடற்கரைப் பகுதியில் இலவச இணைய வசதிக்கு ஏற்பாடு செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஒன்று, மாநகராட்சி மன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் அருகே இலவச இணைய வசதி அளிக்கப்பட இருக்கிறது. இதற்காக தனியார் நிறுவனத்துடன் சென்னை மாநகராட்சி நிபந்தனைகளுடன் கூடிய ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது என மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்தூக்கிக்குள் சிக்கிய அமைச்சர்

சென்னை: அரசு மருத்துவமனை மின்தூக்கி திடீரெனப் பழுதானதில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதற்குள் சிக்கிக்கொண்டார். நேற்று முன்தினம் மருத்துவமனை வளாகத்தில் புதிய திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் மருத்துவமனை கட்டடத்தின் மூன்றாம் தளத்தில் இருந்து தரைத்தளத்துக்கு வர மின்தூக்கியைப் பயன்படுத்தினார். இந்நிலையில், பாதி வழியில் அந்த மின்தூக்கி பழுதடைந்து நின்றது. இதனால் அனைவரும் பதற்றமடைந்தனர். இதையடுத்து மின்தூக்கியை இயக்குபவரின் உதவியோடு, பத்து நிமிடங்களில் அமைச்சர் அதிலிருந்து மீட்கப்பட்டார்.

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என சென்னை மேயர் உறுதி

சென்னை: அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். அம்மா உணவகத்தால் ரூ.756 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், அவை தொடர்ந்து இயங்கும் என்றும், அந்த உணவகங்கள் இப்போது எப்படி செயல்படுகின்றனவோ, அதுபோலவே இனியும் செயல்படும் என்றும் மேயர் உறுதியளித்துள்ளார். உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்ட கலைமாமணி பட்டம் திரும்பப்பெறப்படும்

மதுரை: கடந்த அதிமுக ஆட்சியில் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருது திரும்பப் பெறப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2019, 2020 ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டபோது, தகுதியற்ற சிலருக்கும் அந்த விருது கிடைத்ததாகக் குறிப்பிட்டு நெல்லையைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அவரது மனு மீதான விசாரணையின்போது, கொடுத்த விருதுகளை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். தமிழக அரசின் இந்த முடிவுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.