திருப்பூர்: பொது மக்கள், சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, திருப்பூர் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இந்தி பெயர் பலகை அகற்றப்பட்டது. மேலும், முன்புபோல் தமிழ் அறிவிப்புப் பலகை காணப்படுகிறது.
திருப்பூர் ரயில் நிலையத்தில் இயங்கி வரும் சேவை மையத்துக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில் இதுநாள் வரை 'சேவை மையம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, 'சேவை மையம்' என்பதைக் குறிப்பிட 'சகயோக்' என்ற இந்தி வார்த்தை பெரிதாக எழுதப்பட்டது. இதையே தமிழ் எழுத்துகளைக் கொண்டு 'சகயோக்' என்று எழுதி வைத்துள்ளனர். அதே இந்தி வார்த்தைதான் ஆங்கில எழுத்துகளிலும் அந்தப் பலகையில் இடம்பெற்றுள்ளது.
இதையறிந்த மொழி, சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழைப் புறக்கணிக்கும் செயலை ஏற்க இயலாது என பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, தமிழை மறைத்து இந்தியில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றக்கப்பட்டுள்ளது. மீண்டும் தமிழ் வார்த்தைகள் கொண்ட அறிவிப்பு இடம் பெற்றுள்ளது.

