சென்னை: வடகிழக்கு மாநிலங்களில் தமிழ் மொழியை விருப்ப மொழியாக பாடத் திட்டத்தில் சேர்ப்பதற்கான முயற்சிகளை தாம் மேற்கொண்டுள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சம்்பந்தப்பட்ட மாநில முதல்வர்களிடம் தாம் பேசி வருவதாக சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
"திருக்குறளை மற்ற மாநிலங்களின் பாடத்திட்டங்களில் சேர்க்க அதை மொழிபெயர்க்க வேண்டியிருக்கும். இதற்கேற்ப, காசி தமிழ்ச் சங்க விழாவில், பிரதமர் மோடி பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார்," என்றார் ஆளுநர் ரவி.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்தி திணிப்பை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்திலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழின் தொன்மை, சிறப்புகள் குறித்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிரதமர் மோடி தமது உரைகளில் சுட்டிக்காட்டி வருகிறார்.
இந்நிலையில், தமிழக ஆளுநரும் தன் பங்குக்கு வடகிழக்கு மாநிலங்களுக்கு தமிழ் மொழியைக் கொண்டு செல்ல தாம் முயற்சி மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

