கும்பகோணம்: அம்பேத்கர் காவி உடை அணிந்திருப்பது போன்ற புகைப்படத்துடன் ஓட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் கும்பகோணத்தில் பரபரப்பு நிலவுகிறது. இதையடுத்து அந்தச் சுவரொட்டியை அச்சிட்டவர் கைதாகினார்.
அம்பேத்கரின் நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவரது உருவப் படத்துக்கும் சிலைக்கும் மாலை அணிவிப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், கும்பகோணம் பகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் அம்பேத்கர் காவி உடை அணிந்து, நெற்றியில் திருநீறும் குங்குமமும் பூசியிருப்பது போன்ற படம் இடம்பெற்று இருந்தது.
இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலர் குருமூர்த்தி பெயர் இந்தச் சுவரொட்டிகளில் இடம்பெற்றிருந்ததால் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக அந்தச் சுவரொட்டிகளை அகற்றாவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை சுவரொட்டிகளைக் கிழித்தெறிய ஏற்பாடு செய்ததுடன், கும்பகோணம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தியது.
குரு மூர்த்தி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

