சென்னை: சென்னையில் கடற் கரைக்கும் வேளச்சேரிக்கும் இடையிலான பறக்கும் ரெயில் நிலையங்களை சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப் படவுள்ளன.
முறையான பராமரிப்பு இல்லாததால் மின்தூக்கி, மின்படிகள் உள்ளிட்டவை இயங்காமல் செயலிழந்துள்ளன.
ரயில் நிலையங்களில் உள்ள கழிவறைகள் சீரமைக்கப்படாததால் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் மின்விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் பயணிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.
இந்த நிலையில் உடனடியாக பறக்கும் ரயில் நிலையங்களை மேம்படுத்த வேண்டும் என்று பயணிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால் பறக்கும் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகளை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் மேற்கொள்ளவிருக்கிறது.
இதில் ரயில்களுக்கு புதிய இயந்திரம், 'குளிர்சாதன' வசதி கொண்ட பெட்டிகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், வாகன நிறுத்துமிடங்கள் போன்ற பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட உள்ளன.
இது குறித்து விளக்கம் அளித்த ரயில்வே அதிகாரி ஒருவர், 'பறக்கும் ரயில்கள்' தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படுகிறது.
ரயில் நிலைய கட்டடங்கள் மிகவும் பழமையாக உள்ளன. பயணிகளுக்கு பாதுகாப்புக் குறைபாடு உள்ளது. இதனால் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனவே பறக்கும் ரயில் நிலை யங்களை மேம்படுத்த ஆலோசிக்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பறக்கும் ரயில்களை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் புதிய இயந்திரம், 'ஏசி கோச்' பெட்டிகள் பயணிகள் வசதிக்காக விரைவில் அமைக்கப்பட உள்ளது. வணிக வளாகங்கள், உணவகங்கள், வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெறவுள்ளன என்றார். ரயில் நிலையங்களை மேம்படுத்துவதன் மூலம் பறக்கும் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அந்த பேச்சாளர் நம்பிக்கை தெரிவித்தார்.


