சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின் வாரிய ஊழியர்கள், நுகர்வோர் வீடுகளுக்குச் சென்று விவரம் சேகரிக்க வேண்டும் என்பதை ஏற்க இயலாது என மின்வாரிய ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக ஊழியர்களுக்குப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் தங்களது அன்றாடப் பணிகளை முடக்கிவிட்டு ஆதார் இணைப்புக்கு முக்கியத்துவம் அளித்து வீதிவீதியாக அலைய வைப்பதை ஏற்க முடியாது என்றும் களப்பிரிவிலும் கணக்கீட்டுப் பிரிவிலும் ஆள் பற்றாக்குறை உள்ள நிலையில், நாள்தோறும் கடும் பணிச்சுமையுடனும் மனஅழுத்தத்துடனும் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்றும் அச்சங்கத்தின் செயலாளர் எஸ்.கண்ணன் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, மின்வாரியப் பிரிவு அலுவலகங்களில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ள எஸ்.கண்ணன், ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று மின்நுகர்வோரிடம் ஆதார் எண்ணை பெற்று வந்து கணினியில் பதிவேற்றம் செய்திடுமாறு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டி உள்ளார்.
"வாய்மொழி உத்தரவுகள் மூலம் ஊழியர்களை கொத்தடிமைகளாக பணியாற்ற வைக்க நிர்வாகம் நினைத்தால், அதை எதிர்த்து ஊழியர்கள் போராட வேண்டியிருக்கும். எனவே, இதுபோன்ற முயற்சிகளைக் கைவிட வேண்டும்," என எஸ்.கண்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

