கோவை: தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை சுமார் 15 விழுக்காடு குறைந்துள்ளதாக காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு குறிப்பிட்ட பகுதியில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தால்தான் அங்கு சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று கூற முடியும் என்று குறிப்பிட்டார்.
"கடந்த ஆண்டு 1,597 கொலைச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. நடப்பாண்டில் கொலைகளின் எண்ணிக்கை 1,368ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் 15 விழுக்காடு அளவில் கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன.
"அதேபோல் கடந்த ஆண்டு ஆதாய கொலைகளின் எண்ணிக்கை 89ஆக பதிவான நிலையில், நடப்பாண்டில் அது 79ஆகக் குறைந்துள்ளது. மேலும், கொள்ளை வழக்குகளின் எண்ணிக்கை 111ல் இருந்து 96ஆகக் குறைந்துள்ளது," என்று டிஜிபி சைலேந்திரபாபு விவரங்களைப் பட்டியலிட்டார்.
தமிழகம் முழுவதும் கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய நடவடிக்கைகள் பெரிய குற்றங்களைக் கண்டறிய உதவுவதாகத் தெரிவித்தார்.
மாநிலம் கடந்து வந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை தமிழக காவல்துறை கண்காணித்து வருவதாகவும் பிற மாநிலங்களில் இருந்து மருத்துவக் கழிவுகளைக் கொண்டு வந்து தமிழகத்தில் கொட்டுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தலைவர் குறிப்பிட்டார்.
கேரளாவில் இருந்து எல்லை கடந்து வந்து தமிழகத்தில் உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டிச் செல்கிறார்கள். இதைத் தடுக்க எல்லையில் ஆறு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தென்காசி, பொள்ளாச்சி, கன்னியாகுமரி பகுதிகளில் இது தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
"வெளி மாநில வாகனங்களைக் கண்காணிக்க சுங்கச் சாவடியில் நவீன சாதனங்கள் பொருத்தும் பணிகளும் நடந்து வருகின்றன," என்றார் டிஜிபி சைலேந்திரபாபு.
தற்போது இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதுதொடர்பாக தமிழகத்தில் 45 ஆயிரம் வழக்குகள் பதிவாகி உள்ளதாகத் தெரிவித்தார்.

