'108 அதிகாரங்களை மட்டும் சேர்க்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'
சென்னை: தமிழகப் பள்ளிகளில் ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்களில் திருக்குறளின் 108 அதிகாரங்களையும் சேர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
இது தொடர்பாக ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும், தமிழக அரசு அதைச் செயல்படுத்தவில்லை என மதுரை உயர் நீதிமன்றக் கிளை சுட்டிக்காட்டியுள்ளது.
108 அதிகாரங்களில் உள்ள குறள்களை பள்ளிகளில் கற்பிக்க ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ராம்குமார் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை உயர் நீதிமன்றக் கிளையில் தொடுத்திருந்தார். அதன் மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது.
அப்போது, கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின்போது நடந்தவற்றை ராம்குமார் தரப்பு குறிப்பிட்டது.
திருக்குறளில் உள்ள காமத்துப்பாலைத் தவிர்த்து அறத்துப்பால், பொருட்பாலில் உள்ள 108 அதிகாரங்களும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் உயர் நீதிமன்றக் கிளை 2016ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மனுதாரர் ராம்குமார் தமது மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார்.
"108 அதிகாரங்களில் உள்ள குறள்களை, கற்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது 30 முதல் 60 திருக்குறள் மட்டுமே பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன," என்று ராம்குமார் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அண்மைய விசாரணையின்போதும் ராம்குமார் தரப்பு இதைச் சுட்டிக்காட்டியது.
இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு மூன்று மாதங்களில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

