சென்னை: புயல், கனமழை ஆகியவற்றுக்கு மத்தியில் சென்னை கடற்கரையில் மூதாட்டி ஒருவரைத் தாக்கி, கழுத்தை அறுத்து, நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கடந்த சில நாள்களாக மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது. குறிப்பாக சென்னை கடற்கரைப் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு காவல்துறை தடை விதித்துள்ளது. அதையும் மீறி பலர் கடற்கரைக்குச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் நள்ளிரவு 1.30 மணியளவில் மூதாட்டி ஒருவர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில், அங்கு மதுபோதையில் வந்த நான்கு இளையர்கள் ஆட்டோவை நிறுத்தினர். பின்னர், மழை கடுமையாக இருப்பதால் ஆட்டோவில் சில நிமிடங்கள் அமர்ந்து ஓய்வெடுக்க அனுமதிக்குமாறு கேட்டனர். மூதாட்டியும் ஆட்டோ ஓட்டுநரும் இதற்கு ஒப்புக்கொண்ட நிலையில், திடீரென இருவரையும் தாக்கத் தொடங்கினர்.
இதனால் உதவி கேட்டு அந்த மூதாட்டி குரல் எழுப்பத் தொடங்கியதும், நான்கு பேரில் ஒருவர் அவரது கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி, தங்கக் கம்மல், ரூ.10,000 ரொக்கப் பணம் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு நான்கு இளையர்களும் ஓட்டம் பிடிக்க, அந்த மூதாட்டி மீண்டும் உதவி கேட்டு கூக்குரல் எழுப்பினார்.
அப்போது கடற்கரை சாலையில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தங்கள் வாகனத்தில் வந்துள்ளனர். நான்கு இளையர்கள் தப்பியோடுவதைக் கண்டு நிலைமையைப் புரிந்துகொண்ட காவலர்கள் அவர்களை விரட்டிப் பிடிக்க முற்பட்டனர். அப்போது நால்வரில் ஒருவர் கடலுக்குள் குதித்து நீந்தத் தொடங்கினார். எனினும் காவலர்கள் அவரைப் பிடித்து கைது செய்தனர்.
மற்ற மூன்று பேரும் தப்பியோடிய நிலையில், பிடிபட்ட இளையரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. நான்கு பேர் மீதும் கொலை முயற்சி உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. தப்பியோடிய மூவருக்கும் வலைவீசப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கண்காணிப்பு அதிகம் உள்ள கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்துள்ள இந்தக் கொள்ளைச் சம்பவத்தால் பரபரப்பு நிலவுகிறது.

