சென்னை: தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று (டிச. 14) காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்கிறார்.
திமுக அமைச்சரவை பொறுப்பேற்றபோதே, கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
பின்னர், உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று சில அமைச்சர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின் அமைதி காத்தார்.
தொகுதிப் பணிகள், செஸ் ஒலிம்பியாட் முன்னேற்பாடுகள், சட்டமன்றச் செயல்பாடுகள் என பல நிகழ்வுகளில் உதயநிதி ஸ்டாலினின் திறமையைக் கண்கூடாக அறிந்த பின்னரே அவரை அமைச்சராக்க முதல்வர் ஸ்டாலின் சம்மதித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், திமுக உள்கட்சித் தேர்தல்கள் முடிந்து, இளைஞரணிச் செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் தேர்வானார். இதையடுத்து, அவரை அமைச்சராக்க வேண்டும் என்று அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், உதயநிதியை அமைச்சரவையில் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்து, ஆளுநர் மாளிகைக்குப் பரிந்துரைத்தார். அமைச்சரவை விரிவாக்கம் தவிர, சில மூத்த அமைச்சர்கள் கவனிக்கும் துறைகளும் மாற்றம் செய்யப்படும் எனத் தெரிகிறது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, முதல்வராக மு.க.ஸ்டாலினும் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
பின்னர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமைச்சரவையில் துறைகள் மாற்றம் நடைபெற்றது. எனினும், அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறவில்லை.
உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை ஆகியவை ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் செயலராக இருந்த அபூர்வா மாற்றப்பட்டு, டெல்லியில் தமிழ்நாடு இல்ல உள்துறை ஆணையராக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அதுல்ய மிஸ்ராவின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உதயநிதி அமைச்சராகப் பதவியேற்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி 1957ல் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். இதனையடுத்து 10 ஆண்டுகள் கழித்து 1967ஆம் ஆண்டுதான் முதன்முறையாக பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று 17 ஆண்டுகள் கழித்து 2006ல் தான் முதன்முறையாக அமைச்சரானார். அப்போது அவருக்கு உள்ளாட்சித் துறை வழங்கப்பட்டது
இந்நிலையில் 2021ல் முதன்முறையாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் 19 மாதங்களில் அமைச்சராகிறார்.
எனவே, உதயநிதி அமைச்சராகப் பதவியேற்பதைத் தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்ட சில மூத்த அமைச்சர்கள் கவனிக்கும் துறைகளும் மாற்றம் செய்யப்படும் எனத் தெரிகிறது.

