சென்னை: சென்னையில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட காசிமேடுப் பகுதியைப் பார்வையிட வந்த முதல்வர் ஸ்டாலினின் வாகனத்தின் படியில் ஆர்.கே.நகர் திமுக எம்எல்ஏ எபினேசர், சென்னை மேயர் ஆர்.பிரியா ஆகியோர் தொங்கிச் சென்றனர். அது குறித்த காணொளி இணையத்தில் பரவி வருகிறது.
பிரியா, தனது 28வது வயதில் கடந்த மார்ச் மாதம் சென்னை மேயராகப் பொறுப்பேற்றார். சென்னை மாநகராட்சியின் இளம் மேயர், முதல் தலித் பெண் மேயர், வடசென்னையைச் சேர்ந்த முதல் மேயர் போன்ற சிறப்புகளைப் பெற்றார். இவர் வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பிரியா, மேயராகப் பதவியேற்றதில் இருந்து அவரைப் பற்றிய விமர்சனங்கள் இணையத் தளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வந்தன. அமைச்சர் கே.என்.நேரு இவரை ஒருமையில் பேசினார் என்றும், அமைச்சர் சேகர்பாபுவுக்கு இவர் குடை பிடித்தார் என்றும் இணையத் தளங்களில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் எழுந்தன.
மேயர் பிரியா விளக்கம்: "அமைச்சர் கே.என்.நேரு என்னை ஒருமையில் பேசவில்லை, என்னை மகள் போல் கருதி பேசினார். அமைச்சர் சேகர்பாபுவுக்கு குடைபிடித்தது இயல்பான செயல்தான். மழையின்போது குடைபிடிப்பது தவறு இல்லை. மாநகராட்சி சார்பில் ஏராளமான பணிகளைச் செய்து வருகிறோம். புயல் தாக்கியபோது, தூக்கமின்றி பணியாற்றினர். தனிப்பட்ட எனது செயலை பரப்புவதால் யாருக்கும் பயனும் இல்லை. அதற்கு பதிலாக, மக்கள் நலப் பணியாளர்களின் தியாகங்களை இணையத் தளங்களில் பரப்பலாம்," என்று கூறியுள்ளார்.
இதுபற்றி கூறிய அமைச்சர் சேகர்பாபு, ''முதல்வருடன் செல்ல வேண்டும் என்ற துடிப்போடு நடந்த செயல் இது. ஆணுக்குநிகராக ஒரு பெண், துணிச்சலுடன் செய்யும் பணிகளைப் பாராட்ட வேண்டுமே தவிர, விமர்சிக்கக் கூடாது,'' என்று கூறியுள்ளார்.

