சென்னை: தமிழக அரசியலுக்கும் திரையுலகிற்கும் மிகமிக நெருங்கிய தொடர்புள்ளது. தமிழகத்தில் நடிகராக இருந்து அமைச்சர், முதல்வராகப் பலர் பதவி யேற்றுள்ளனர்.
அந்தப் பட்டியலில் புதிதாக இப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இணைந்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதல்வர்களாக இருந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோர் தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்தவர்கள். ஜெயலலிதாவும் எம்ஜிஆரும் நடிப்பிலும் கருணாநிதி தனது திரைப்பட வசனத்தாலும் மக்களின் இதயங்களில் அசைக்கமுடியாத சிம்மாசனம் இட்டு அமர்ந்தவர்கள். இவர்கள் மூவரும் தமிழக அரசியலில் தவிர்க்கமுடியாத தலைவர்களாக உருமாறி முதலமைச்சராகப் பதவி வகித்தவர்கள்.
ஆனால், இவர்களது பட்டியலைத் தொடர்ந்து அரசியலில் நுழைந்த சிவாஜியின் அறிமுகம் சொல்லிக்கொள்ளும்படி அமையாமல் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கி எம்எல்ஏவானார். அதேபோல், விஜயகாந்த் தேமுதிக கட்சியைத் தொடங்கி எம்எல்ஏவானார். இவர் கடந்த 2011ல் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
அதன்பிறகு கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் துவக்கினார். இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
எம்எல்ஏவான நடிகர்-நடிகைகள்
இதுதவிர திமுக, அதிமுக, பாஜக கட்சிகளில் நடிகர், நடிகை கள் தங்களை இணைத்துக் கொண்டு இயங்கி வருகின்றனர்.
திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் எம்எல்ஏ, எம்பிக்களாக இருந்துள்ளனர்.
சட்டசபைக்கு முதல்முதலாக நுழைந்த நடிகை என்றால் அது கேபி சுந்தராம்பாள் (எம்எல்சி), நடிகர் என்றால் அது எஸ்எஸ்ஆர். இவர் 1962ல் தேனியில் இருந்து திமுக சார்பில் எம்எல்ஏவானார். அதன்பிறகு நெப்போலியன், ராதா ரவி, சரத்குமார், விஜயகாந்த் வரிசையில் உதயநிதி ஆகியோர் எம்எல்ஏவாக ஜொலித்துள்ளனர். நெப்போலியன் எம்பியாக செயல்பட்டுள்ளார். மத்திய அமைச்சராகவும் நெப்போலியன் பொறுப்பேற்றார். இவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராக இருந்துள்ளார்.
இந்நிலையில்தான் உதயநிதி நேற்று ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
திரையுலகில் நடிகராக இருந்த இவர் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாகி இப்போது விளையாட்டு, இளைஞர் நலன் துறை அமைச்சராகி உள்ளார்.

