கோவை: கோவை மாவட்டம், அன்னூரில் தொழில் பூங்கா அமைக்க 3,731 ஏக்கர் விவசாய விளைநிலத்தை கையகப்படுத்த உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
'நமது நிலம் நமதே' என்ற பெயரில் போராட்டக் குழு ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.
15 கிராமங்களில் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகள் நிலம் கையகப்படுத்த வந்தால் அதைத் தடுக்கவே அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக பேராட்டக் குழுவினர் கூறினர்.
இந்நிலையில், அன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொழில் பூங்கா அமைக்க விவசாயிகளின் விருப்பம் இல்லாமல் எக்காரணம் கொண்டும் எந்த ஒரு நிலமும் கையகப்படுத்தப்படாது என நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா கோைவயில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் அச்சத்தைப் போக்க தெளிவான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். டிட்கோ நிறுவனத்தின் நிலங்களை மட்டும் பயன்படுத்தி தொழில்பூங்கா அமைக்கப்பட உள்ளது. யாராவது நிலத்தை வாங்கிக் கொள்ளும்படி கூறினால் மட்டுமே அந்த நிலத்தை வாங்கிக்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விவசாயம் செய்யப்படும் விவசாயிகளின் நிலங்கள் எதையும் அவர்களின் அனுமதி இன்றி எடுப்பதில்லை என்பதில் திட்டவட்டமாக தமிழக அரசு உள்ளது என்றும் அவர் கூறினார்.
அன்னூரில் அமையும் தொழிற்பூங்காவில் உள்ளூர் மக்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் நிலங்களை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் அப்பகுதியில் அமையாது என்றும் கூறியுள்ளார்.

