சென்னை: தமிழக அமைச்சரவையில் உதயநிதிக்கு 10வது இடம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூத்த அமைச்சர்களைப் பின்னுக்குத் தள்ளி அவர் 10வது இடத்துக்கு முன்னேறியிருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலினுக்கு விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, க.பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் வருகின்றனர். உதயநிதிக்கு அடுத்ததாக 11ஆவது இடத்தில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இடம்பெற்றுள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 23ஆவது இடத்திலும் இந்து சமய அறநிலையத்துறை பி.கே.சேகர்பாபு 26வது இடத்திலும் உள்ளனர்.
உதயநிதியின் நெருங்கிய நண் பரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி 30ஆவது இடத்தில் உள்ளார். மொத்தம் 35 அமைச்சர்கள் உள்ள பட்டியலில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கடைசியில் இருக்கிறார்.
சட்டமன்ற உறுப்பினராக மட்டும் இருந்தபோது உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டமன்றத்தில் முதல் வருக்குப் பின்னால் இரு வரிசை தள்ளி இடமளிக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் காட்டும்போதெல்லாம் அவருக்குப் பின்னால் அவரது மகன் உதயநிதி இருப்பது தெரியும்.
இந்த நிலையில் அமைச்சராக பதவியேற்றுள்ளதால் உதயநிதியின் இடம் சட்டமன்றத்தில் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தனக்கு எதிராக எதிர்மறையான விமர்சனங்கள் ஆரம்பத்திலிருந்தே வந்து கொண்டிருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"அமைச்சர் பொறுப்பை சவாலாக எடுத்துப் பணியைச் சிறப்பாக செய்வேன். விமர்சனங்களை செயலால் எதிர்கொள்வேன்." என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
இந்த நிலையில் திருப்பதியில் ஏழுமலையானை குடும்பத்துடன் தரிசித்த நடிகர் ரஜினிகாந்திடம், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பு ஏற்றது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதற்கு உதயநிதிக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

