சென்னை: திமுக மாடல் ஆட்சியின் வெப்பம் தாளாமல் மக்கள் துடிக்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி காட்டமுடன் கூறி உள்ளார்.
திமுக குடும்பத்தின் ஆக்டோபஸ் ஆட்சியால் பாதிக்கப்படும் மக்கள் கொதித்தெழுந்து ஆட்சியாளர்களை விரட்டியடிப்பார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
பொய்யிலே பிறந்து, பொய்யிலே வாழும் தமிழகத்தின் முதலமைச்சரும் அமைச்சர்களும் அவருக்குக் கீழ் பணியாற்றும் ஒருசில உயர் அதிகாரிகளும் அதிமுக ஆட்சியில் துவக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட திட்டங்களை, ஈர்த்த முதலீடுகளை திமுக அரசு கொண்டுவந்ததாக ஸ்டிக்கர் ஒட்டி, இந்த கையாலாகாத அரசைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்.
கடந்த 19 மாத திமுக மாடல் ஆட்சியின் வெப்பம் தாங்காமல் மக்கள் துடித்து வருவது கண்கூடு.
ஆனால், புதுச்சேரிக்குச் சென்று திருமண விழா ஒன்றில் பேசும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின், மக்கள் தொலைபேசியில் தன்னைப் பாராட்டுவதாக தனக்குத் தானே சுயபெருமை பேசுகிறார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், அதற்கு உதாரணமாக சில சம்பவங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்னை முதல் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வரை உள்ள அத்தனை சோதனைச் சாவடிகளையும் கடந்து, எந்தவித தடையு மின்றி சுமார் 160 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்கள் மண்டபம் வந்தது எப்படி? என்று மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் ஆச்சரியப்படுகின்றனர்.
ஒருசில உயர் அதிகாரிகளின் துணை இல்லாமல் இந்தக் கடத்தல் நடந்திருக்க முடியாது என்ற சந்தேகம் இச்செய்தியைப் படிக்கும் அனைவரிடமும் எழுந்துள்ளது.
எனவே, இந்த திமுக அரசின் காவல்துறை ``வாய்ச் சொல்லில் வீரரடி'' என்று இல்லாமல், போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

