கோவை: சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் வசித்து வரும் குழந்தைகள் கோவைக்கு விமானத்தில் பறந்து செல்வதை நினைத்து உற்சாகம் அடைந்தனர்.
ஆதரவற்றோர் இல்லங்களில் வசித்து வரும் குழந்தைகளின் 'விமானத்தில் பறந்து பார்க்க வேண்டும்' என்ற நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையில், சென்னையில் உள்ள 'ரெயின் டிராப்ஸ்' என்ற சமூக சேவை அமைப்பு ஒரு நாள் பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சென்னையில் உள்ள சேவாலயா, ஆனந்தம், செஸ் உட்பட இல்லங்களில் தேர்வு செய்யப்பட்ட 26 குழந்தைகள் விமானத்தில் கோவைக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தப் பயணத்துக்கு சத்யபாமா பல்கலை உதவியது.
கோவை விமான நிலையத்தில் சிறார்களை மாவட்ட ஆட்சியர் சமீரனும் மாநகராட்சி ஆணையர் பிரதாப்பும் வரவேற்றனர். கோவையில் அறிவியல் மையம், ஜி.டி. நாயுடு அருங்காட்சியகம் உட்பட பல இடங்களை ரசித்த சிறுவர்கள் சென்னைக்குத் திரும்பினர்.

