சென்னை: அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முன்வர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் மாணவர்கள் சங்கமித்து மகிழவும் பள்ளியின் தேவைகளை நிறைவேற்றவும் ஏதுவாக தன்னார்வலர்களிடம் நிதிபெற்று அரசுப் பள்ளிகளைப் பலப்படுத்தும் திட்டம் இன்று 19ஆம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.
முதல்வர் ஸ்டாலினும் 50 ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் பயின்றவர் என்பதால், நிகழ்ச்சியில் பங்கேற்று தனது பள்ளிக்கால அனு பவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "நான் இந்நிகழ்ச்சியில் ஒரு முதல்வராகப் பங்கேற்கவில்லை. மாறாக ஒரு மாணவராக, அனைவரின் நண்பராகக் கலந்துகொண்டுள்ளேன்," எனத் தெரிவித்தார்.
நாம் படித்த பள்ளிக்குச் செல்லப்போகிறோம் என்ற உணர்வில் இரவில் தூக்கம் இல்லாமல் இருந்ததாகத் தெரிவித்த அவர், இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்தருணத்தில் பல்வேறு நினைவுகள் தமக்கு வருவதாகக் கூறினார்.
"இங்கே இருக்கக்கூடிய சிலர் முகத்தை எல்லாம் பார்க்கும்போது, சில ஆசிரியர்களைப் பார்க்கும் போது, குறிப்பாக தமிழாசிரியர் ஜெயராமனை பார்க்கும்போது 'ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே' என்கிற பாட்டுத்தான் என் நினைவுக்கு வருகிறது. அதைப் பாடவும் ஆசைமேலோங்குகிறது.
"உலகத்திலேயே மிகப்பெரிய மகிழ்ச்சி என்பது கடந்த கால இனிமையான நினைவுகள்தான். ஒவ்வொரு மனிதனையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது இதுபோன்ற ஞாபகங்கள்தான்," எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், "இந்தப் பள்ளியில்தான் என் சகோ தரர்கள் முத்து, அழகிரி ஆகிய இருவரும் படித்துக் கொண்டிருந்தனர். அதனால், எனக்கும் இங்கு எளிதாக இடம் கிடைத்துவிடும் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இங்கு நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வில் நான் தேர்ச்சி பெறாமல் தோல்வி அடைந்துவிட்டேன். என்னைச் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டனர். அப்போது சென்னையில் மேயராக இருந்த குசேலரின் பரிந்துரையில் இடத்தைப் பெற்று படித்தேன்," என்றார்.
"ஒரு பள்ளியில் இருந்து எத்தனையோ மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் வந்திருப்பார்கள். ஆனால், ஒரு முதல்வரை உருவாக்கிய பெருமை இப் பள்ளிக்கு வந்து சேர்ந்திருக்கிறது என்றால், அதில் எனக்கும் பெருமை தான்," என்று தெரிவித்தார்.
மாணவப் பருவம் திரும்பக் கிடைக்காத பருவம் என்றும் கூறிய ஸ்டாலின், முன்னாள் மாணவர்கள் தான் பயின்ற பள்ளியைப் பலப் படுத்த உதவவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

