சென்னை: நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பெண் பயணிக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி காரணமாக விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நேற்று முன்தினம் சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்குப் பறந்து கொண்டிருந்தது அந்த விமானம். அதில் 378 பயணிகள் இருந்தனர்.
அப்போது மலேசியாவைச் சேர்ந்த 58 வயதான ஜமீலா பிந்தி என்ற பெண்மணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் வலியால் துடிப்பதைக் கண்டு உடன் இருந்த குடும்பத்தார் பதறிப்போயினர்.
விமானப் பணிப்பெண்கள் ஜமீலாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். எனினும் நிலைமை மோசமடையவே, தலைமை விமானிக்கு விவரம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக விமானத்தை தரையிறக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அச்சமயம் அந்த விமானம் இந்திய வான் பறப்பில் பறந்து கொண்டிருந்தது. எனவே அவர் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்தார். அதன் பின்னர் விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், அந்தப் பயணிக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
அந்த விமானம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதும், ஜமீலா பிந்தி அங்கு காத்திருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவருடன் பயணம் மேற்கொண்ட குடும்ப உறுப்பினர்கள் இருவரும் உடன் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், இருவருக்கும் அவசரகால மருத்துவ விசா வழங்கப்பட்டது.
இதையடுத்து 375 பயணிகளுடன் அந்த விமானம் மீண்டும் கோலாலம்பூருக்கு புறப்பட்டுச் சென்றது.

