அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி (படம்) பெயரில் தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவுக் கணக்கை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையத்தளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இது ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பினருக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் இரட்டைத் தலைமை பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அந்த பொதுக்குழுவிலேயே ஒருங்கிணைப்பாளர் பதவி காலவதியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டதுடன், ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவியும் பறிக்கப்பட்டது.
கட்சியின் உரிமை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததை அடுத்து, ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தற்போது நடைபெற்று வருகின்றது.
மேலும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொதுக்குழு தீர்மானங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று ஓபிஎஸ் தரப்பிலும் தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 3ஆம் தேதி இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தில் 2021-2022ஆம் ஆண்டிற்கான அதிமுக வரவுசெலவுக் கணக்கு தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வரவுசெலவு கணக்கை ஏற்றுக்கொண்ட இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இபிஎஸ் தரப்பு ஆவணங்களைப் பதிவிட்டுள்ளது. அதில், எடப்பாடி பழனிசாமி பெயரில் அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரித்துறை கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும் அங்கீகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வம்
யார் உண்மையான அ.தி.மு.க. என்ற சண்டை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையே நீடித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நேற்று சென்னையில் கூட்டி கலந்து ஆலோசித்தார்.
500க்கும் மேற்பட்ட ஓபிஎஸ் தரப்பு மாவட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், "எங்களுக்கே இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கும். பொதுக்குழு முறையாக நடைபெறும், அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். இறுதி வெற்றி எங்களுக்குத் தான்," என்றார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என தகவல் வெளியாகியிருக்கிறது.

