சென்னை: திருச்சி சிறப்பு முகாமில் ஆயுதக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 9 பேரை, ஜனவரி 3ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க சென்னையில் உள்ள தேசிய புலனாய்வுத் துறையின் (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களைத் தங்க வைப்பதற்காக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது.
இங்கு இலங்கை தமிழர்கள் 80 பேர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 132 பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குப் புத்துயிரூட்டும் வகையில், பாகிஸ்தானிலிருந்து இந்தியா மற்றும் இலங்கைக்கு ஆயுதங்கள், போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஜூலை 8ஆம் தேதி தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் திருச்சி, சென்னை, திருப்பூர், செங்கல்பட்டு உட்பட 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ஜூலை 20ஆம் தேதி சோதனை நடத்தினர்.
திருச்சி சிறப்பு முகாமில் நடந்த சோதனையின்போது அங்கிருந்து கைத்தொலைபேசிகள், சிம் கார்டுகள், பென்டிரைவ், ஹார்ட் டிஸ்க், மடிக்கணினி ஆகியவை கைப்பற்றப்பட்டன.
அதன் அடிப்படையில் திருச்சி சிறப்பு முகாமிலிருந்த இலங்கையைச் சேர்ந்த குணசேகரன் என்ற பிரேம்குமார், புஷ்பராஜா என்ற பூக்குட்டி கண்ணா, முகமது ஆஸ்மின், அழக பெருமக சுனில் காமினி பொன்சேகா என்ற கோட்ட காமினி, ஸ்டான்லி கென்னடி பெர்னான்டோ என்ற பொம்மா, தனுகா ரோஷன், லடியா, காமேஷ் சுரங்கா பிரதீப் என்ற வெள்ள சுரங்கா, திலீபன் ஆகிய 9 பேர் ஐஎன்ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.