சென்னை: தமிழக மீனவர்கள் இனியும் கைது செய்யாமல் இருக்க இலங்கை அரசாங்கத்தை எச்சரிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை அவர் நேற்று வெளியிட்டார்.
"வங்கக்கடலில் கோடியக்கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 12 பேரை சிங்கள கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் படகு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சிங்கள கடற்படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.
"இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் கவலை தெரிவித்திருக்கிறார். இதனால் பயனில்லை. இலங்கையை கண்டிப்பதும் எச்சரிப்பதும்தான் இத்தகைய அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்தும்.
"இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர் சிக்கலுக்குத் தீர்வு காண இருதரப்பு மீனவர்களின் பேச்சுக்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்," என்று அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
"பொதுவாக தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்கும் போது, ஆழ்கடல் பகுதியை நோக்கிச் செல்கின்றனர். அப்போது அனைத்துலக கடல் எல்லை அருகே செல்லும் சூழல் உருவாகிறது.
"இதையடுத்து கச்சத்தீவு, நெடுந்தீவு பகுதிகளுக்கு அருகே தமிழக மீனவர்கள் வருவதாகவும் இலங்கை கடற்படையினர் குற்றம் சாட்டுகின்றனர்.
"அது மட்டுமல்லாமல் கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கும் ஆளாகின்றனர். மேலும் அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துவிடுகின்றனர். இதனால் தமிழக மீனவர் களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.
"ஆனால், ஒன்றிய அரசு இலங்கை நாட்டுடன் சமாதான போக்கையே காட்டி வருகிறது. எச்சரிக்கை விடுக்கப்பட்டால் மட்டுமே இந்தப் பிரச்சினை முடிவுக்கு வரும்," என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

