புதுடெல்லி: சீனாவில் பரவி வரும் பிஎஃப் 7, பிஎஃப் 12 ஆகிய ஓமிக்ரான் துணைக் கிருமிகள் குஜராத், ஒடிசா மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளன.
குஜராத்தில் இருவரும், ஒடிசாவில் ஒருவரும் புதிய வகைக் கிருமிகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை விமான நிலையங்களில் கண்காணிக்கவும் அவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்க இந்தியாவில் 2021 ஜனவரி 16 முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
முதல் தவணை, இரண்டாம் தவணை தடுப்பூசியைத் தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசியும் எல்லா மாநிலங்களிலும் போடப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக மூக்கு வழியாக கிருமித் தடுப்பு மருந்து செலுத்துவதற்கான அனுமதியை மத்திய அரசாங்கம் வழங்கி உள்ளது.
பல்வேறு கட்டமாகப் பரிசோதித்த பிறகே இந்த மருந்துக்கான அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த அனுமதி நேற்று நடப்புக்கு வந்தது.
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள இந்த மூக்கு வழி தடுப்பு மருந்து முதற்கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் செலுத்த அனுமதிக்கப்படுகிறது.
கோவேக்சின், கொவிஷீல்ட் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்கள் அல்லது எந்தவொரு கொவிட்-19 தடுப்பூசியையும் இதுவரை போட்டுக்கொள்ளாதவர்கள் மூக்கு வழி தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

