சபரிமலைக்குச் சென்று திரும்பியபோது விபத்து; மூன்று பேர் நிலை கவலைக்கிடம்
தேனி: நாற்பது அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் எட்டு பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் காரணமாக குமுளி பகுதியில் சோகம் நிலவுகிறது.
இந்த விபத்தில் கார் ஓட்டுநர் உட்பட மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள ஐயப்ப கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். நவம்பர் தொடங்கி ஜனவரி மாதம் வரை வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை புரிகின்றனர்.
இந்நிலையில், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சிலர் இரு தினங்களுக்கு முன்னர் சபரிமலைக்குச் சென்றிருந்தனர். அங்கு சாமி தரிசனம் முடிந்து நேற்று முன்தினம் அவர்கள் கார் ஒன்றில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, தமிழக, கேரள எல்லையையொட்டி உள்ள குமுளி மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்த அந்தக் கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது.
பின்னர் மலைப் பாதையில் அமைந்துள்ள மாதா கோவில் அருகே உள்ள நூறடி பள்ளத்தில் கவிழ்ந்தது அந்தக் கார். பள்ளத்தில் தலைகீழாகப் பாய்ந்ததுடன், அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரியாறு அணைக்குச் செல்லும் மிகப்பெரிய குழாய்கள் மீது விழுந்ததில், அவையும் காருடன் சேர்ந்து உடைந்து நொறுங்கின.
இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி, அதில் வந்த ஐயப்ப பக்தர்கள் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி மாண்டுவிட்டனர்.
மீட்புப் படையினரும் விபத்து நிகழ்ந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டபோது, காரின் ஓட்டுநர், சிறுவன் உட்பட மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
மூவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

