நாகர்கோவில்: தமிழகத்தில் புதிதாக 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறந்து வைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இம்மையங்கள் அனைத்தும் தமிழக முதல்வரால் ஒரே நாளில் திறந்து வைக்கப்படும் என்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளைப் போன்ற 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி 21 மாநகராட்சி, 63 நகராட்சிகளில் இந்த நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
ஒரு மருத்துவர், ஒரு மருந்தாளுனர், உதவியாளர், உரிய மருத்துவ உபகரணங்கள் எனப் பல்வேறு வசதிகளுடன், இந்த நலவாழ்வு மையங்கள் இயங்கும் என்றும் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு ஒரே நாளில் 708 மையங்களையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைப்பார் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
"தற்போது சில நாடுகளில் பரவி வரும் உருமாறிய கொரோனா தொற்று தொடர்பாக தமிழக அரசு தீவிர கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
"எனவே புதிய தொற்றுப் பரவல் குறித்து தமிழக மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை," என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

