சென்னை: திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மூத்த அமைச்சர் துரைமுருகன் (படம்) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு சனிக்கிழமை நள்ளிரவில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.
வயோதிகம் காரணமாக இதுபோன்ற உடல் பாதிப்புகள் ஏற்படுவது வழக்கம்தான் என்றும் அவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பு தெரிவித்ததாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இதயப் பிரச்சினைக்கு சிகிச்சை பெற்ற துரைமுருகன், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகள் செய்து கொள்கிறார். தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுவதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

