சென்னை: ஆண்டுதோறும் நடைபெற்று வரும் சென்னை அனைத்துலக புத்தகக்காட்சி ஜனவரி 6 முதல் 22ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தகக்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னை ஒய்எம்சிஏ திடலில் புத்தகக்காட்சி நடைபெறுகிறது.
46வது புத்தகக்காட்சி குறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் எஸ்.வயிரவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழக அரசின் ஆதரவுடன் ஜனவரி 16 தேதி முதல் 18ஆம் தேதி வரை மூன்று நாள்கள் அதே வளாகத்தில் சென்னை அனைத்துலகப் புத்தகக்காட்சி நடைபெறும் என்றார்.
"புத்தகக்காட்சிக்காக 800 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் மூன்று நாள்கள் நடைபெறும் அனைத்துலக புத்தகக்காட்சிக்கு என 30 குளிரூட்டப்பட்ட அரங்குகள் தனியாக ஒதுக்கப்பட்டு உள்ளன. அனைத்துலக காட்சியில் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பதிப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
"இதுதவிர சிறிய அளவில் புத்தகங்களை வெளியிடும் பதிப்பாளர்களுக்காக சிறிய அரங்குகளும் திருநங்கை பதிப்பாளர்களுக்கு என சிறப்பு அரங்கும் அமைக்கப்பட்டு உள்ளன," என்றார் வயிரவன்.
புத்தகக் காட்சியானது தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் என்றும் தமிழக அரசின் பாடநூல் நிறுவனம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்ய அகாடமி, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
"இதுதவிர பல்வேறு நாடுகள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் புத்தகக்காட்சியில் கலந்துகொள்கின்றனர்," என்றார் வயிரவன்.

