சென்னை: நாளைய நள்ளிரவில் 2023ஆம் ஆண்டு பிறக்கவுள்ள நிலையில், அதனை வரவேற்க பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.
தமிழகத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு களை அறிவித்துள்ள தமிழகக் காவல்துறை, இரவு ஒரு மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண் டைக் கொண்டாடி மகிழ அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளது.
இப்புத்தாண்டை வீட்டிலிருந்த படியே குடும்பத்துடன் கொண்டாடி மகிழும்படி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ள தமிழகக் காவல்துறை, நாளை இரவு பொது இடங்களிலும் சாலைகளிலும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
சென்னையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டுவது வழக்கம்.
இந்தச்சூழலில், புத்தாண்டுக் கொண்டாட்டம் தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து தமிழக காவல்துறை சார்பில் அறிக்கை வெளி யிடப்பட்டுள்ளது.
அதில், நாளை இரவு புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது.
பைக் சாகசங்கள் உள்ளிட்ட ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது. மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள். அத்துடன், அவர்களது வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.
வழிபாட்டுத் தலங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளதாகவும் குழப்பம் விளைவிக்க முயல்பவர்கள் கட்டாயம் கைது செய்யப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
கேளிக்கை விடுதிகளில் புத் தாண்டுக் கொண்டாட்டங்கள் தொடர்பான காவல்துறையின் அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்புத்தாண்டை ஒட்டி நாளை மாலை முதல் தமிழகம் முழுவதும் 10,000 ஊர்க்காவல் படையினர் உட்பட ஒரு லட்சம் காவலர்கள் மக்களுக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மோட்டார் வாகனங்களில் நீண்ட தூரம் பயணம் செய்யும் காவலர் கள், மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை பாதுகாப்பான இடங்களில் வாகனங்களை நிறுத்தி தேநீர் அருந்தலாம். இதற்காக நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகள் இரவு முழுவதும் திறந்திருக்கும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசம்பாவிதம் இல்லாத, விபத்தில்லாத புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பை நல்கவேண்டும் எனவும் காவல்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

