மதுரை: பிஎஃப் 7 வகை கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்து 17 பேருக்கு வேகமாகப் பரவும் தன்மை கொண்டதால், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது அவசியம் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
இச்சூழலில், திருச்சி, மதுரை போன்ற அனைத்துலக விமான நிலையங்களுக்கு வரும் பயணி களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
அத்துடன், சீனா, தைவான், ஜப்பான், ஹாங்காங், தென்கொரியா ஆகிய ஐந்து நாடுகளில் இருந்து வருகின்ற பயணிகள் அனைவரையும் 100% பரிசோதனை செய்ய வேண்டும் என்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே, சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், வெளி நாடுகளில் இருந்து சென்னை வந்த மேலும் இருவருக்கு பாதிப்பு கண்ட றியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ் வுத் துறை அமைச்சர் மா. சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.
"கம்போடியா, துபாயில் இருந்து வந்த தலா ஒருவருக்கு தொற்றின் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் ஆந்திர மாநிலம், கடப்பாவைச் சேர்ந்தவர். மற்றவர் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர்," என மா. சுப்பிரமணியன் கூறினார்.
சீனாவில் இருந்து மதுரைக்கு வந்தவர்களின் மாதிரிகள் சென்னை ஆய்வகத்தின் மரபணு பகுப்பாய்வுக் கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
ரத்த ஓவியத்துக்கு தடை
தொடர்ந்து பேசிய அவர், "ரத்ததானம் என்பது பல உயிர்களைக் காப்பதற்குப் பயன்படுகிறது. அதனைப் பயன்படுத்தி ஓவியம் வரைவது சரியான அணுகுமுறை அல்ல. ரத்த ஓவியம் வரைவதற்குத் தமிழ்நாட்டில் தடை விதிக்கப்படுவதாகக் கூறிய அவர், மீறினால் சம்பந்தப்பட்ட மையங்கள் மூடி முத்திரை வைக்கப்படும்.
"ரத்தத்தை படம் வரைவதற்குப் பயன்படுத்தும்போது, எச்ஐவி போன்ற நோய் பாதிப்பிற்கு உள்ளானவர்களிடமிருந்து ரத்தம் பெறப்பட்டிருந்தால் அது பலரையும் தாக்கி, பாதிப்பிற்குள்ளாக்கும். எனவே, இத்தொழிலை நிறுத்திக் கொள்ளவேண்டும்," எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

