சென்னை: தமிழகத்தில் போலி மருத்துவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாக காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் மருத்துவ கருத்தரங்கு ஒன்றைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், தமிழகத்தில் உண்மையான சேவை மனப்பான்மை கொண்டுள்ள மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில்தான் அதிகமாக உள்ளனர் என்றார்.
"தற்போது லட்சக்கணக்கான இளையர்கள் மருத்துவராக வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். இது நல்ல வளர்ச்சி.
"மருத்துவத் துறையில் தொழில்நுட்பம் பெருமளவில் வளர்ச்சி கண்டுள்ளது," என்றார் டிஜிபி சைலேந்திர பாபு.
மருத்துவர்கள் நலமாக இருந்தால்தான் பொதுமக்களும் நலமுடன் வாழ முடியும் என்று குறிப்பிட்ட அவர், தமக்கும் மருத்துவராக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது என்றார்.
எனினும் பின்னர் மக்களைக் காக்கும் காவல்துறை அதிகாரியாகிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
"தமிழகத்தில் போலி மருத்துவர்கள் குறித்த புகார்கள் அதிகரித்து வருகின்றன. எனவே போலி மருத்துவர்களைக் கண்டறிவதற்கான சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும்," என்று டிஜிபி சைலேந்திர பாபு மேலும் கூறினார்.

