சென்னை: சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வரும் பயணிகள் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்வதற்கான சான்றுகளை வழங்க வேண்டியது கட்டாயமாகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அனைத்து பயணிகளும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு அதற்குரிய சான்றை வைத்திருக்க வேண்டும் என்றும் ஜனவரி 1 (இன்று) முதல் இந்த நடைமுறை கட்டாயமாக்கப்படு கிறது என்றும் தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, நோய் தடுப்பு நடவடிக்கைகளில் சில வழிகாட்டுதல்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து, தென் கொரியா, ஜப்பான், ஹாங்காங் ஆகிய பகுதிகளில் இருந்து வருவோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
"குறிப்பிட்ட ஆறு நாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வருவோா் தாங்கள் பயணிப்பதற்கு 72 மணி நேரத்துக்குள்ளாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்துக்கு வந்ததும் அதற்கான சான்றை சமா்ப்பிக்க வேண்டும்.
"அனைத்துலக பயணிகளில் தோராயமாக இரண்டு விழுக்காட்டினருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். தடுப்பூசி முறையாக செலுத்தியதற்கான சான்றுகளைக் காண்பித்தல் அவசியம்," என்று செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
தமிழக விமான நிலையங்களில் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவா் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கொரோனா தொற்று உறுதியாகும் பட்சத்தில் அவர் களது சளி மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்று குறிப்பிட்டுள்ள அவர், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் வீட்டுக்குச் சென்றாலும் தங்களது உடல் நிலையைக் கண்காணித்து அறிகுறிகள் இருப்பின் 104 என்ற சுகாதாரத் துறை எண்ணுக்குத் தகவல் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தோராயமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் ஆா்டிபிசிஆா் பரிசோதனை செய்யப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் புதிய உருமாறிய கொரோனா தொற்றுப் பரவலைக் கண்டறிவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக, அன்றாட தொற்றுப் பரிசோதனை சுமார் 25% அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
தொற்றுப் பரவல் காரணமாக பல்வேறு உலக நாடுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதன் காரணமாக வெளிநாடு செல்லும் ஆர்வம் குறைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

