சென்னை: புத்தாண்டு தினத்தையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய புலனாய்வு முகமைகள் எச்சரித்துள்ளன. இதையடுத்து நாடு முழுவதும் அதிரடிச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
புத்தாண்டு வேளையில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழக்கூடாது என்பதில் மாநில அரசுகள் கவனமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதைக் கவனத்தில் கொண்டு தமிழக அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளது.
மெரினா, பெசன்ட்நகர் கடற்கரைப் பகுதிகளில் நேற்று இரவு போக்குவரத்து தொடர்பாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அண்மைய சில ஆண்டுகளாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
இந்நிலையில், 'உயிரிழப்பு இல்லா புத்தாண்டுக்கு முந்தைய நாள்' என்ற நோக்கத்துடன் தமிழக காவல்துறை ஓர் அறிக்கையை வெளியிட்டது.
அதன்படி, கடற்கரை சாலை அருகே மக்கள் திரளாகக் கூடுவதை தடுக்கும் வகையில், போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதேபோல், சென்னை மாநகரில் உள்ள மேம்பாலங்களும் நேற்று இரவு பத்து மணி முதல் இன்று காலை ஆறு வரை மூடப்பட்டன.
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் காவல்துறை யினர் சுற்றுக்காவல் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். இன்று இரவு வரை இந்தக் கண்காணிப்பு நீடிக்கும் எனத் தெரிகிறது.
போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது உடனடியாக வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றும் மது அருந்திய பின் வாகனங்களை ஓட்டுவோர், அதிக வேகத்தில் செல்வோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என காவல்துறை எச்சரித்தது.
இதற்கிடையே, சென்னை கடற்கரையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம் என்ற கருப்பொருளுடன் அமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
புத்தாண்டையொட்டி பெண்களுக்கான இடர் இல்லா சமுதாயத்தை உருவாக்கிடுவோம் என்ற முழக்கத்துடன் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள பதாகையில் அவர் கையெழுத்திட்டார்.

