சென்னை: பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகம் வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் சென்னை முதல் திருவனந்தபுரம் வரை 1,000 கிலோ மீட்டர் தூரம் ஆட்டோ பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஜெர்மனி, நியூசிலாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த 70 பேர் தமிழகம் வந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் 32 ஆட்டோக்களில் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து சாகசப் பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த 28ஆம் தேதி இவர்களுடைய பயணம் தொடங்கியது. பத்து நாள்களில் கேரளா சென்றடைவர்.
''உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, அப்பகுதிகளில் உள்ள கலாசார பின்புலம் கொண்ட மக்களைச் சந்தித்து வருகிறோம். தற்போது தென்னிந்திய கலாச்சாரம், பண்பாடுகள் குறித்து அறிய ஆட்டோ பயணம் மேற்கொண்டுள்ளோம். தமிழக மக்களின் உணவும் வரவேற்பும் வெகுவாகக் கவர்ந்துள்ளது," என இக்குழுவைச் சேர்ந்த மேத்யூ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

