சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் நியாயவிலைக்கடை அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு ஆகியவற்றுடன் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்பட உள்ளது.
இதன் தொடர்பில், கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்புக் கிடங்கில் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நியாயவிலைக்கடை அட்டைதாரர்கள் இரண்டு கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 73 பேருக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றார்.
இதற்கான அடையாள வில்லைகள் தற்போது விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
முதல்வர் மு.க. ஸ்டாலின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை இம்மாதம் 9ஆம் தேதி தொடங்கிவைப்பார் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது.
ஒரு நியாயவிலைக் கடை எத்தனை அட்டைதாரர்களுக்குச் சேவை வழங்குகிறது என்பதன் அடிப்படையில் ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு இந்தத் தொகுப்புகளை வழங்கலாம் என்பது முடிவு செய்யப்படும் என்றார் அமைச்சர்.
விவசாயிகளும் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் பொங்கலுக்கு கரும்பு விநியோகம் செய்ய வேண்டும்.
பன்னீர் கரும்புக்கு அதிக விலை கிடைக்காது என்பதால் அதனை அரசாங்கம் கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தார்கள்.
அதனைப் பரிசீலனை செய்த முதல்வர் ஸ்டாலின், இரண்டு கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 73 அட்டைதாரர்களுக்கும் இலங்கை மறுவாழ்வுத் தமிழர்கள் 19 ஆயிரத்து 269 பேருக்கும் கரும்பு வழங்கும்படி உத்தரவிட்டுள்ளார் என்று திரு சக்கரபாணி குறிப்பிட்டார்.
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கரும்பு பயிரிடப்படுகிறது. அந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு கரும்பு கொள்முதல் செய்யப்பட உள்ளது. ஒரு கரும்புக்கு ரூ.33 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
கரும்பை இடைத்தரகர்கள் இன்றி மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுக்களே நேரடியாகக் கொள்முதல் செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆய்வின்போது உணவு, கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் வே. ராஜாராமன், தமிழ்நாடு வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் சு. பிரபாகர் ஆகியோர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் அமைச்சர் சக்கரபாணியுடன் இருந்தனர்.

