சென்னை: குடும்பப் பெண்களை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் தரகரை சென்னை காவல்துறை கைது செய்தது.
திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த 28 வயதான சங்கீதா என்பவர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி குடும்பப் பெண்களை ஏமாற்றி மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
போதுமான வருமானமின்றி தவிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை நோட்டம் விடும் சங்கீதா, பின்னர் அவர்களை அணுகி, ஆசை வார்த்தைகளைப் பேசி, தன்னுடன் அழைத்து வருவது வழக்கம்.
பின்னர் சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் அப் பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்தி உள்ளார்.
மேலும், அப்பெண்களின் குடும்பத்தாருக்குச் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அவ்வப்போது கைப்பேசி மூலம் சில நிமிடங்கள் பேச வைத்துள்ளார்.
இந்நிலையில், அடுக்குமாடிக் குடியிருப்பில் பாலியல் தொழில் நடப்பதாக சென்னை காவல்துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் உயரதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
நேற்று முன்தினம் பெண் தரகர் சங்கீதா பாலியல் தொழில் நடத்தி வந்த வீட்டில் நுழைந்து சோதனை மேற்கொண்டபோது இரண்டு குடும்பப் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அவர்களை மீட்டதுடன் சங்கீதாவையும் கைது செய்த காவல்துறையினர், இக்குற்றத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவருக்கு வலைவீசியுள்ளதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

