அமைச்சர்: தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் ஓராண்டில் 18% வளர்ச்சி
நெல்லை: கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்துறையில் தமிழகம் சாதனைகளைப் படைத்துள்ளது என்றும் மென்பொருள் (செயலி) ஏற்றுமதியில் தமிழகம் வேகமாக முன்னேறி வருவதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து மென்பொருள் துறை சார்ந்த ஏற்றுமதியானது ரூ.1.70 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று நெல்லையில் தொழில்நுட்ப நிறுவனங்கள், பொறியியல் பட்டதாரி மாணவர்கள், புத்தாக்க தொழில் முனைவோர் ஆகியோருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
இணைய பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இத்துறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
"தமிழகத்தில் மென்பொருள் துறை சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் ஒரு லட்சத்து 243 கோடி ரூபாய்க்கும் மற்றவை மூலம் ரூ.70 ஆயிரம் கோடிக்கும் மென்பொருள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
"இதன் மூலம் தேசிய அளவில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த ஐந்துஆண்டுகளில் தமிழகத்தில் தனி நபர் வருமானம் அதிகரிக்கும்," என்றார் அமைச்சர் மனோ தங்கராஜ்.
இந்த நிகழ்வின்போது தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் 'சேவை' என்ற பெயரில் `வாட்ஸ்-அப்' சேவை திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த அரசின் மின் ஆளுமை திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக விளங்கி வருவதாகவும் அமைச்சர் அப்போது குறிப்பி்ட்டார்.
"தமிழக அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்களின் பலன் தகுதியானவர்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தகவல் தொழில்நுட்பத்துறையின் மூலம் 12 இலக்க எண்ணுடன் மாநில குடும்ப தரவுத்தளத்தின் அடிப்படையில் 'மக்கள் அடையாள அட்டை' என்ற திட்டம் செயல்படுகிறது.
"இத்திட்டமானது மத்திய அரசின் ஆதார் எண்ணுக்குப் போட்டியாகத் தொடங்கப்படவில்லை," என்று அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்தார்.
கடந்த ஓராண்டில் மட்டும் தகவல் தொழில்நுட்பத்துறை 18 விழுக்காடு அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் மென்பொருள் நிறுவனங்கள் அமைப்பதற்காக 68.80 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது என்றும் மிக விரைவில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் தொழில் முனைவோர் மாநாடு தென் மாவட்டங்களில் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

