சென்னை: சேது சமுத்திர திட்டம் நிறைவேறி இருந்தால் தமிழ்நாட்டில் தொழில்வளம் பெருகி இருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், சேது சமுத்திர திட்டத்தை பாஜகதான் தடுத்து நிறுத்தியது என்றார்.
"அத்திட்டம் நிறைவேறி இருந்தால் இந்தியாவுக்குப் பெருமை கிடைத்திருக்கும். தமிழ்நாட்டின் தொழில்வளம் பெருகியிருக்கும். கடல்சார் வணிகம் மேம்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் மெருகேறியிருக்கும்.
"சேது சமுத்திர பகுதியில் பாலம் இருந்ததற்கான ஆதாரமே இல்லை என்று மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் இப்போது சொல்லி இருக்கிறார்.
"இந்த திட்டத்தை எப்படியும் செயல்படுத்த கருணாநிதி முனைந்தபோது, அப்போதைய மத்திய அரசும் இணைந்தது. ஆனால் இந்த திட்டம் தடுக்கப்பட்டது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் எத்தனையோ பயன்களை தமிழகம் அடைந்திருக்கும்," என்றார் முதல்வர் ஸ்டாலின்.
சேது திட்டம் நிறைவேறாமல் போனதற்கு பாஜகவும் அதிமுகவும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம்சாட்டிய அவர், அத்திட்டத்தை செயல்படுத்த முயன்ற முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மீண்டும் முயற்சிகளைத் தொடங்க வேண்டும் என்றார்.
"இது முன்னாள் முதல்வர்்களான அண்ணா, கருணாநிதியின் கனவு திட்டம். எனவே இந்த திட்டத்தை மீண்டும் நிறைவேற்றிடும் கடமை டி.ஆர்.பாலுக்கு இருக்கிறது. அவர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்," என்றார் மு.க.ஸ்டாலின்.

