மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள கரும்பாறை முத்தையா கோயிலில் வித்தியாசமான முறையில் அசைவ விழா கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவில் கலந்துகொள்ள பெண்களுக்கு அனுமதி இல்லை. ஆண்கள் மட்டுமே பங்கேற்று, உணவை சமைத்து விருந்துக்கு வந்த ஆயிரக்கணக்கான ஆட வர்களுக்குப் பரிமாறினர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள அனுப்பப்பட்டி என்ற கிராமத்தின் காவல் தெய்வமாக கரும்பாறை முத்தையா கோயில் உள்ளது.
இக்கோயிலில் கோபுரம், சாமி என சிலைகள் கிடையாது. இங்குள்ள பாறையையே சாமியாக மக்கள் வணங்குகின்றனர்.
இக்கோயிலில் விவசாயமும் தங்கள் வாழ்வாதாரமும் செழிக்க வேண்டி ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ உணவுத் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதனையொட்டி, 1,500 கிலோ அரிசியில் அசைவ உணவு தயாரிக்கப்பட்டு, முத்தையா சுவாமிக்கு படையலிட்டு, கோயில் திறந்தவெளி வளாகத்தில் பக்தர்களுக்குப் பரிமாறப்பட்டது.
விழாவில் திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான், ஆண்டிப்பட்டி, தேனி, கம்பம், விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் கலந்துகொண்டு அசைவ உணவை உண்டனர்.
இவ்விழாவுக்கு பிறந்த பச்சிளம் பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரை பங்கேற்க அனுமதி கிடையாது.
கறி விருந்து முடிந்தவுடன் இலையை எடுக்க மாட்டார்கள். இலை காய்ந்த பின்புதான் பெண்கள் அந்தப் பகுதிக்கு செல்லவேண்டும் என்பது வழக்கம்.

