பல நாடுகளிலும் வசிக்கும் தமிழர்களைக் கவர புதிய இணையத்தளம் தொடக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் தொடங்கப்படும் புத்தொழில் நிறுவனங்களில் உலகத் தமிழர்கள் முதலீடு செய்ய ஏதுவாக தமிழ்நாட்டில் புதிய இணையத் தளம் தொடங்கப்பட்டு இருக்கிறது.
தமிழக அரசின் டான்சிம் நிறுவனத்தின் குளோபல் தமிழ் ஏஞ்செல்ஸ் www.tamilangels.fund என்ற அந்த இணையத் தளத்தை தமிழ்நாட்டின் முதல்வர் மு க ஸ்டாலின் திங்கட்கிழமை தொடங்கி வைத்தார்.
வடஅமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை, தமிழ்நாடு புத்தொழில், புத்தாக்க இயக்கம் இணைந்து நடத்திய உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் அந்தப் புதிய இணையத் தளம் தொடங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் தொடங்கப்படும் புதிய புத்தாக்க நிறுவனங்களில் இடம்பெறக்கூடிய முதலீடுகள் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு US$1.5 பில்லியனாக அதிகரித்து இருக்கிறது என்றும் இது 2021ஆம் ஆண்டைவிட 70 விழுக்காடு அதிகம் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடி பசுமை நிதியம் அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
பருவநிலை மாற்றம் காரணமாக தலைதூக்கி உள்ள பிரச் சினைகளுக்குத் தீர்வு காணும் திட்டங்களிலும் தொழில்நுட்பங்களிலும் அந்த நிதி முதலீடு செய்யப்படும்.
இதுபோன்ற ஆக்கபூர்வமான முயற்சிகளில் உலகளாவிய தமிழ் முதலீட்டாளர்கள் பெருமளவில் ஈடுபட வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்திக் கூறினார்.
அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் அமெரிக்க தமிழ் நிதியம் என்ற ஓர் அமைப்பை தொடங்கி இருக்கிறார்கள்.
அந்த அமைப்பு தமிழ்நாட்டின் புத்தொழில், புத்தாக்க நிறுவனங்களில் ரூ.16 கோடி முதலீடு செய்து இருக்கிறது என்றும் இது ஊக்கமூட்டுவதாக இருப்பதாகவும் திரு ஸ்டாலின் தெரிவித்தார்.

