சேலம்: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனியப்பன், 90, என்பவருக்கு எதிராக அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்று தாக்கலாகி இருக்கிறது.
மனு பற்றி உடனே விசாரணை நடத்தும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
பழனியப்பனின் தாலி கட்டிய மனைவியான பொன்னம்மாள், 82, தன்னுடைய 60 வயது மகள் கமலாவுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து அழுது புலம்பி தாக்கல் செய்த புகாரில் பல விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
"என்னுடைய கணவரான பழனியப்பன் ஏற்கெனவே குப்பாயி, 70, என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். வேண்டாம், வேண்டாம் என்று பலமுறை நாங்கள் கத்தியும் கதறியும் அவர் அந்தத் தொடர்பை விடவில்லை.
"அது போதாது என்று இப்போது பழனியம்மாள் என்ற வேறு ஒரு 70 வயது பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருக்கிறார். எங்களின் ஒரே மகன் ஏற்கெனவே தவறிவிட்டான். கள்ளத்தொடர்பு வைத்திருப்பதோடு நின்றுவிடாமல் பழனியம்மாளுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள எங்களின் 6.5 ஏக்கர் நிலத்தையும் என் கணவர் எழுதிக்கொடுத்துவிட்டார்.
"என்னுடைய பேரப்பிள்ளையுடன் நான் வசித்து வந்த வீட்டை இடித்து வெளியே துரத்திவிடப் போவதாகவும் என் கணவர் மிரட்டுகிறார்.
"இந்த நிலையில், கூலி வேலை செய்து பிழைப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. இந்த வயதில் அதுவும் என்னால் முடியவில்லை. ஆகையால், கணவரிடம் இருந்து எங்கள் சொத்தை மீட்டு எங்களுக்குப் பாதுகாப்பு வழங்குங்கள்.
"இல்லை என்றால் என்னை கருணைக் கொலை செய்துவிடுங்கள்" என்று எழுதிய புகார் மனுவை ஆட்சியரிடம் தாக்கல் செய்த பொன்னம்மாள் கேவிக் கேவி அழுதார். இது பற்றி உடனடியாக விசாரணை நடத்தும்படி ஆட்சியர் காவல்துறைக்கு உத்தரவிட்டு இருக்கிறார்.

