தமிழ்நாடு முழுவதும் புதன்கிழமை (ஜனவரி 11) திரையரங்குகளில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் வெளியாகியது.
இந்நிலையில், சென்னையில் அத்திரைப்படத்தை நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கச் சென்ற 19 வயது அஜித் ரசிகர் ஒருவர், திரைப்படத்தின் வெளியீட்டைக் கொண்டாடியபோது உயிரிழந்தார்.
கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் படம் பார்க்க சென்ற அந்த இளையர், லாரிமீது நடனமாடியவாறே கீழே குதித்துவிட்டார். இதில் அவரது முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், மகனின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுத அந்த இளையரின் தாயார், ஊடகங்களுக்கு அளித்த பேட்டி இணையத்தில் பரவலாகி வருகிறது.
“அஜித் ரசிகர் என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு படத்திற்குச் சென்ற என்னுடைய வாரிசை நான் இழந்துவிட்டேன். என்னுடைய நிலைமை வேறெந்த ஒரு தாய்க்கும் ஏற்படக்கூடாது. நான்தான் இதற்கு ஓர் உதாரணம்!
"வீட்டு வேலை செய்து மிகவும் கஷ்டப்பட்டு அவனைப் படிக்க வைத்தேன், இப்படி ஆகிவிட்டதே! என் பிள்ளைக்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எந்த ஒரு பிள்ளைக்கும் ஏற்படக்கூடாது!” என்று அவர் குமுறினார்.
இந்தக் காணொளி, பார்ப்பவர்களின் நெஞ்சை உருக்குகிறது.