சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.124 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், புதுமையான வழி முறைகளில் கடத்தப்பட்ட போதைப்பொருள்கள், வனவிலங்குகள், வெளிநாட்டுப் பணம், வைரங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் ரூ.94 கோடியே 22 லட்சம் மதிப்பிலான 205 கிலோ தங்கம், ரூ.14 கோடி மதிப்பிலான 28 கிலோ போதைப்பொருள்கள் ஆகியவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து, கடத்தலில் தொடர்புடைய 104 பேரைக் கைது செய்தனர்.
அதேபோல் சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற ரூ.11 கோடி மதிப்புடைய அமெரிக்க டாலர், யூரோ நாணயம், அரேபியாவின் ரியால் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
துபாய், ஷார்ஜா, குவைத், சவூதி அரேபியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்பட்டு உள்ளதாக சுங்கத்துறை வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து 12 முறை கடத்திவரப்பட்ட கொக்கேன், மெத்தகுலோன், ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
2021ஆம் ஆண்டில் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியிருந்த நிலையில், இது கடந்த ஆண்டு 94 கோடியாக அதிகரித்து இருந்தது.
அதேபோல், போதைப்பொருள்கள் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.11 கோடியில் இருந்து ரூ.14 கோடியாகவும் வெளிநாட்டுப் பணம் ரூ.9 கோடியில் இருந்து எறக்குறைய ரூ.11 கோடியாகவும் அதிகரித்து இருந்தது.
ஆகமொத்தம் 2022ல் ரூ.124 கோடியே 88 லட்சம் மதிப்பிலான தங்கம், போதைப்பொருள் உள்ளிட்டவை கடத்தப்பட்டுள்ளன. 407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 122 கடத்தல் ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெண்களும் அடங்குவர் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்தில் இருந்து டாமரின் குரங்குகள், மலைப்பாம்புகள், நரிக்குட்டிகள், தேள்கள், ஆமைகள் உட்பட 134 அரிய வகை வன உயிரினங்களைக் கடத்தி வந்த ஐவர் கைது செய்யப்பட்டனர். இந்த உயிரினங்கள் எந்த நாட்டில் இருந்து வந்ததோ அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டன. போதைப்பொருளும் வெளிநாட்டுப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.
படம்: தமிழக ஊடகம்

