சென்னை: தமிழகத்தில் உள்ள வெளி மாநிலத் தொழிலாளர்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்படுவதாக தொழிலாளர் நலத்துறை அமைசம்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழகத்தில் வட மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் ஆதிக்கமும் அதிகரித்து வருவதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறினார்.
"வட மாநிலத்தினர் ஒன்றரை கோடி பேர், தமிழகத்தில் உள்ளனர். அவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை வழங்கப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசுக்கு மிகப்பெரிய அபாயம் ஏற்பட்டுள்ளது என்பதை முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும்," என்றார் வேல்முருகன்.
மேலும், வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறித்து தமிழக அரசிடம் எந்தவிதமான தரவுகளும் இல்லை என்றும் காவல்துறையிடமும் உரிய விவரங்கள் இல்லை என்றும் வேல்முருகன் தெரிவித்தார். இதையடுத்துப் பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், வெளி மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் குறித்து உரிய விவரங்களைச் சேகரிக்க கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.

