சென்னை: மத்திய அரசிடம் இருந்து உதவி மானியங்கள் மூலம் ரூ.39,759 கோடி கிடைக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ரூ.18,367 கோடி மட்டுமே பெறப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவதில் ஏற்படும் கால தாமதங்களால் மாநில அரசு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் எனக் கணிக்கப்பட்ட தொகையில் 46.20 விழுக்காடு மட்டுமே கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
"அண்மையில் மத்திய அரசு நிதியளிக்கும் திட்டங்களுக்கான நிதிப் பரிமாற்றம், நிதி விடுவிக்கும் முறையில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களால் நிதி பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் மத்திய அரசிடமிருந்து பெறும் மானியத்தில் குறிப்பிடத்தக்க அளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்றார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

