சென்னை: தமிழர்களின் மிக முக்கிய பொங்கல் பண்டிகை தை மாதம் முதல் நாளான நேற்று தொடங்கியது.
அந்த நான்கு நாள் விழாவையொட்டி தமிழகம் முழுவதும் பெரும்பாலான கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும் இயற்கைக்கும் உழவுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகத் தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் விழாவையொட்டி தமிழகம் முழுவதும் மக்கள் புத்தாடை அணிந்து, வண்ணக் கோலமிட்டு, பொங்கல் பானைக்கு மஞ்சள், இஞ்சிக் கொத்தைக் கட்டி, மங்கலகரமான புத்தரிசியில் பொங்கலிட்டு பொங்கல் பொங்கியபோது 'பொங்கலோ பொங்கல்' என்று கூறி பெருமகிழ்ச்சி அடைந்தனர். பொங்கலையொட்டி மாநிலத்தின்கல்வி நிலையங்கள் இம்மாதம் 18ஆம் தேதி வரை மூடப்பட்டன.
கொரோனா காரணமாக கடந்த ஈராண்டுகளாக உற்சாகமின்றி நடந்த பொங்கல் விழா இந்த ஆண்டில் கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில் களைகட்டி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. எங்கு பார்த்தாலும் கரும்பு, மஞ்சள், இஞ்சிக் கொத்து, வாழைப்பழம், பூ, புத்தாடை சகிதம் மக்களைப் பார்க்க முடிந்தது.
பொங்கல் பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடும் தமிழர்களுக்கு இந்திய பிரதமர் மோடி தமிழிலேயே வாழ்த்து சொன்னார்.
தமிழக அரசாங்கம், சமூக, இதர அனைத்து அமைப்புகளையும் சேர்ந்த தலைவர்களும் வாழ்த்து கூறினர். மாநிலத்தின் பல இடங்களிலும் சமத்துவ பொங்கலும் இடம்பெற்றது.

