சென்னை: தமிழ்நாட்டில் இணையத்தில் மோசடி வலை விரித்து இரண்டு பேரை ஏமாற்றிய குற்றவாளிகளை 2,500 கி.மீ. பயணம் செய்து வெற்றிகரமான முறையில் பிடித்து வந்து சாதனை நிகழ்த்தி இருக்கிறார் தமிழக பெண் காவல் அதிகாரி.
பரங்கிமலையைச் சேர்ந்த அனந்தராமன் என்பவரும் வேறு ஒரு பெண்ணும் இணையக் குற்றச்செயல் ஒழிப்புப் பிரிவிடம் புகார் தெரிவித்து, தாங்கள் இணைய மோசடிக்காரர்களிடம் லட்சக்கணக்கான பணத்தை இழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதனையடுத்து அந்தப் பிரிவைச் சேர்ந்த கவிதா என்ற காவல்துறை அதிகாரி விசாரணையைத் தொடங்கினார்.
மோசடிக்காரர்கள் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜம்தாரா என்ற இடத்தில் இருந்து செயல்படுகிறார்கள் என்பதும் ஜம்தாரா இணைய மோசடிக்கார்களின் மையமாக இருக்கிறது என்பதும் அவருக்குத் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து அதிகாரி கவிதா தலைமையில் தமிழக காவல்துறை குழு ஒன்று ஹரியானா புறப்பட்டது.
ஜம்தாரா சென்ற அதிகாரி கவிதா, உள்ளூர் காவல்துறையின் உதவியுடன் அந்த நகருக்குள் துணிச்சலாகச் சென்று மஞ்சித் சிங், நாராயண் சிங் என்ற இருவரையும் அவர்களின் வீடுகளிலேயே சுற்றி வளைத்துப் பிடித்தார். பிறகு அந்த இரண்டு பேரையும் உள்ளூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி அனுமதி பெற்றுச் சென்னைக்குக் கொண்டு வந்தார்.
அந்த இருவரில் நாராயண் சிங் என்பவர் நகைக்கடை முகவராகவும் மஞ்சித் சிங் எல்ஐசி முகவராகவும் செயல்பட்டு நாடு முழுவதும் கட்டமைப்புகளை நடத்தி ஏராளமான அப்பாவிகளை ஏமாற்றி இருக்கிறார்கள் என்பது தெரியவந்து இருக்கிறது.
பலரையும் தங்கள் வலையில் விழவைத்து அதன்மூலம் தங்கள் கணக்குக்கு வரும் பணத்தை நகைக்கடனை அடைக்கவும் கடன் அட்டைக் கடனை அடைக் கவும் இவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
சென்னை காவல்துறையிடம் வசமாகச் சிக்கிக்கொண்ட இந்த இருவரிடமும் அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்துவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

