காஞ்சிபுரம்: திருப்பெரும்புதூர் அருகே ஏறக்குறைய 50 பெண் களைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் என சந்தேகப்படும் இருவரைக் காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்து உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று தண்டளம் சாலையோரம் நின்று தன் காதலருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது, காக்கிச் சீருடையில் வந்த இருவர் மிரட்டி, பெண்ணிடம் விசாரணை செய்யவேண்டும் என்று கூறி இருசக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்று விசாரணைக்கு அழைத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.
அதன்பின்னர், பெண்ணிடம் இருந்த மூன்று சவரன் சங்கிலி, 2,000 ரூபாய் பணத்தையும் பறித்துக்கொண்டு இருவரும் தப்பிவிட்டனர்.
இதுதொடர்பாக பெண் அளித்த புகாரை அடுத்து, காவலர்கள் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த நாகராஜ் என்கிற நாகா, 31, பிரகாஷ், 30, ஆகியோரை திருப்பெரும்புதூரில் நடத்திய வாகனச் சோதனையின்போது சுற்றிவளைத்தனர்.
அப்போது, பைக்கில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி நாகராஜ் சுட்டுள்ளான்.
பதிலுக்குத் தனிப்படை காவலர்களும் சுட்டதில் நாகராஜ் காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. பிரகாஷ் துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிச்செல்ல குதித்தபோது தவறி விழுந்து இரு முட்டி எலும்புகளும் உடைந்ததாகக் கூறப்படுகிறது.
இருவருக்கும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதனிடையே, அவர்கள் இருவரும் காஞ்சிபுரத்தில் மற்றோர் இளம்பெண்ணிடமும் காவலர்கள் எனக்கூறி அத்துமீறலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
வெளியூரில் இருந்து வந்து திருப்பெரும்புதூர், இருங்காட்டுக் கோட்டை, சுங்குவார் சத்திரம், ஒரகடம், மாம்பக்கம், வல்லம் - வடகால் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் சென்றுவிட்டு காதலர்களுடன் சுற்றும் பெண்கள்தான் இவர்களின் குறி என்றும் 50க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகளை காவலர்கள் என மிரட்டி பணம் பறித்ததோடு, விசாரணை என்ற பெயரில் பெண்களை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
பலாத்காரம் செய்யும்போது காணொளி எடுத்து, அதனைக் காட்டி பயமுறுத்தி மீண்டும் பலாத்காரம் செய்வது, பணம் பறிப்பது போன்ற செயல்களில் இருவரும் ஈடுபட்டுள்ளனர்.
தங்களிடம் சிக்கிய பெண்களின் தோழிகளையும் வரவழைத்து சீரழித்துள்ளனர்.
இப்படி கிட்டத்தட்ட 50 பெண்களை அவர்கள் பலாத்காரம் செய்திருக்கலாம் என காவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனாலும், சம்பந்தப்பட்ட பெண்களிடம் இருந்து புகார் வந்தால்தான் உறுதியாக எதையும் கூறமுடியும் என்றும் காவலர்கள் கூறியுள்ளனர்.

