புதுடெல்லி: இந்தியாவில் நேற்று முன்தினம் புதிதாக 89 பேருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு இருப்பது உறுதியானது. கடந்த மார்ச் மாதத்துக்குப் பிறகு பதிவான ஆகக்குறைவான அன்றாட பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.
கடந்த 2020, மார்ச் 27ஆம் தேதிக்குப் பிறகு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்த அளவுக்கு குறைந்துள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கி்றது.
இதற்கிடையே, தொற்றுப் பாதிப்புக்காக சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கையும் 2,035ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றுப் பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பலன் அளித்துள்ளன. இதனால் அன்றாட பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் 89 பேருக்கு மட்டுமே தொற்றுப் பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதற்கிடையே கேரளத்தில் பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுப்பரவல் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருகிறது என்றும் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாகவும் கேரள அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
"வாகனங்கள், அரசுப் பேருந்துகளில் செல்லும்போது அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். அனைவரும் தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்," என கேரள அரசு தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவு ஜனவரி 12ஆம் தேதி முதல் அடுத்த ஒரு மாதத்துக்கு அமலில் இருக்கும் என்றும் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் அச்சம் அடையத் தேவை இல்லை என்றும் அரசு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நீடிக்க வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

