மேல்முறையீடு நிராகரிப்பு
மசராட்டி காரை ஓட்டிய ஆடவர் கடந்த 2017ஆம் ஆண்டில் காவல் துறை அதிகாரி ஒருவரை அதில் கிட்டத்தட்ட 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றார். அந்த வழக்கில் லீ செங் யான் என்ற ஆடவருக்கு ஆறாண்டு களுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அந்தச் சம்பவத்துக்கு தான் மிகவும் வருந்துவதாகவும் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் கூறிய லீ தனது செயலின் பின்விளைவுகளை தான் உணராமல் போனதாகக் குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் லீயின் மசராட்டி கார் பறிமுதல் செய்யப்படும் சாத்தியம் உள்ளது. இதன் தொடர்பில் தனது காரை விற்று அதில் கிடைக்கக்கூடிய பணத்தைக் கொண்டு தனது இரு மகள்களின் நல்வாழ்வுக்கு செலவிட எண்ணியுள்ளதால் காரை பறிமுதல் செய்ய வேண்டாம் என்று நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
அவருடைய மேல்டமுறையீடை நிராகரித்த நீதிபதி அய்டிட் அப்துல்லா, "உனது செயலின் கடுமையை நீ உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை," என்று லீயைக் கடிந்துகொண்டார். திரு லீயின் மசராட்டி காரை பறிமுதல் செய்வது தொடர்பாக வேறொரு நாளில் விசாரணை நடைபெறும்.
கத்தியுடன் இருந்த
பெண்ணுக்குச் சிறை
செயின்ட் ஹில்டாஸ் உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே தனது வயிற்றை கத்தியால் குத்திக்கொண்டு தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த பெண், போதைப் பொருள் பயன்படுத்தியதும் ஊக்க மருந்தால் தூண்டப்பட்டார்
என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜுலியான அப்துல் காதிர் எனும் அந்தப் பெண்ணுக்குப் போதைப்பொருளால் மனநலம் பாதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் அரசாங்கத் தரப்பு தெரிவித்தது.
நேற்று 53 வயது ஜுலியானாவுக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கத்தியும் பேனாக் கத்தியும் வைத்திருந்த குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி தெம்பனிசில் உள்ள பள்ளிக்கு வெளியே இந்தச் சம்பவம் நடைபெற்றது. அன்று பள்ளிக்கு வெளியே சாலை வழியாக கத்தியைக் காட்டியபடி ஜுலியானா நடந்துகொண்டிருந்ததாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
அங்கு வந்த காவல்துறையினர் கத்தியைக் கீழே போடுமாறு கூறியும் அதை மதிக்காமல் கத்தியை சுழற்றிக் காட்டினார். பின்னர் அவர் தனது வயிற்றில் குத்திக் கொண்டார். ரத்தம் வழிந்த நிலையிலும் அதிகாரிகள் நெருங்கிவந்தால் மேலும் கத்தியால் குத்திக் கொள்வதாக அவர் மிரட்டினார்.
அதிகாரிகள் அவரை ஒரு வழியாக மடக்கி கைது செய்தனர். அவரிடமிருந்த கத்தியும் மற்றொரு பேனா கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டன.

