திண்டுக்கல்: வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறிய விபத்தில் கணவன், மனைவி பலியான சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வீரக்கல் கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான ஜெயராமன் என்பவர் செம்பட்டில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் பட்டாசுக் கடை நடத்தி வந்தார்.
வணிக வளாகத்தின் மாடியிலேயே அவர் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார்.
ஜெயராமன், நாகராணி (35 வயது) தம்பதியர்க்கு மூத்த மகள் தீப்திகா (7 வயது), இளைய மகள் கனிஷ்கா (5 வயது) மகன் மோகன் (4 வயது) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை ஜெயராமன் பட்டாசுக் கடை நடத்தி வந்த வணிக வளாகத்தில் திடீரென பயங்கர வெடிச்சத்தம் எழுந்தது.
அப்பகுதியில் வசித்த பலர் அந்த வணிக வளாகத்தை நோக்கி ஓடிவந்தனர். அங்கு ஜெயராமனின் மூன்று குழந்தைகளும் வெடிச்சத்தத்தைக் கேட்டு பயந்து, அழுதபடி நின்றிருந்தனர்.
இந்நிலையில், ஒருசில விநாடிகளில் ஜெயராமன் வசித்த பகுதி முழுவதுமாக இடிந்து விழுந்தது. இதில் அவரும் மனைவி நாகராணியும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
இந்த விபத்தின்போது வணிக வளாகத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஐந்து கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்ததாகவும் ஜெயராமன் தன் வீட்டில் குவித்து வைத்திருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்துச் சிதறிவிட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் சுமார் ஐந்து மணி நேரம் போராடி இருவரது உடல்களையும் மீட்டனர். இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

